districts

img

சொர்க்க வாசல் திறக்க வந்த யானைக்கு உடல் நலக் குறைவு

விருதுநகர், ஜன.2- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகர் உள்ள தனியாருக்குச் சொந்தமான இருவேறு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, மாதவி, லலிதா ஆகிய இரு யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.  இராஜபாளையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட லலிதா என்ற 57 வயதுடைய யானைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த யானையை அங்கிருந்து விருதுநகர் மதுரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு அவசர, அவசரமாக கொண்டு செல்லப்பட்டது. பின்பு, கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து யானைக்கு தேவையான சிகிச்சையளித்தனர். அதன்பின்பும், யானை எழவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட லலிதா யானையை இராஜபாளையத்தை சேர்ந்த முகமது ஷேக் என்பவர் பராமரித்து வருகிறார். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர்(பொ) கோவில்ராஜா கூறியதாவது: இராஜபாளையத்தைச் சேர்ந்த லலிதா யானைக்கு ஏற்கனவே, உடல் நிலை சரியில்லை. எனவே, அதை நான்கு மாதங்களுக்கு எங்கும் அழைத்துச் செல்லக் கூடாது என அதை பராமரித்து வருபவரிடம் தெரிவித்திருந்தோம். அந்த ஆலோசனையை பொருட்படுத்தாமல் விருதுநகருக்கு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அழைத்து வந்துள்ளார். இதனால், யானையின் உடல் நிலை மோசமடைந்துள்ளது என்றார்.