districts

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 35ஆவது கட்ட விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி,ஜன.24- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 35-ஆவது கட்ட விசாரணை திங்களன்று தொடங்கியது. தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே 34 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு 1037 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் துப்பாக்கிசூடு சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், அடுத்து வந்த சந்தீப் நந்தூரி, முன்னாள் எஸ்.பி. முரளிரம்பா உள்ளிட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் ஒருநபர் ஆணையத்தின் 35-ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் திங்களன்று தொடங்கியது. இதில் ஆஜராக, துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட எஸ்பி மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், உளவுத் துறை ஐ.ஜி. சத்திய மூர்த்தி உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.