districts

தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிறுத்தும் பிரச்சனை மக்கள் நலனை புறக்கணிக்கும் ரயில்வே

மதுரை, ஜூன் 16- சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ், தற்போது திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டும் இடையில் நின்று செல்கிறது. சென்னையின் மூன்றாவது முனையமான தாம்பரம் ரயில் நிலையத்தில் இந்த தேஜஸ் விரைவு ரயில் நிற்பதில்லை. சென்னையில் புறப்படும் ரயிலில் நாற்பது சதவீதம் அளவுக்கு தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் தேஜஸ் ரயிலில் பயணிக்கின்றனர். எழும்பூரில் காலை ஆறு மணிக்குப் புறப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில், மதுரை சென்று திரும்பவும் சென்னை எழும்பூர் நிலையத்துக்கு இரவு ஒன்பதரை மணியளவில் வந்து சேருகிறது. தற்போது தாம்பரத்தில் இந்த ரயில் நின்று செல்லாததால், தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் எழும்பூர் வந்து ரயிலில் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். இதே மாதிரி இரவில் எழும்பூருக்கு வந்தடையும் ரயிலில் பயணிகள் தங்கள் இருப்பிடத்தைச் சென்றடையவும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வாடகைக் கார் அல்லது ஆட்டோ வாகனங்களுக்கு கணிசமாக செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும். தாம்பரம் மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் ஆரம்பம் முதலே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ரயில்வே வாரியம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. தென்னக ரயில்வே இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் வீண்பிடிவாதம் பிடிக்கிறது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அவர்கள் கூறியதாவது:- சென்னைக்குச் செல்லும் பயணிகளில் 50 சதவீதம் பேர் தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள். மதுரை-சென்னை எழும்பூர் இடையே இரட்டை வழிப்பாதையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீப காலமாக இரண்டு மார்க்கத்திலும் குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரயில்கள் வந்தடைகின்றன. தாம்பரத்தில் தேஜஸ் ரயில் ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடங்கள் நின்று செல்வதால் வண்டின் காலந்தவறாமை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. இந்தியா முழுவதும் ரயில்கள் வருடத்தில் எத்தனை நாட்கள் குறித்த நேரத்தில் வந்தடைகின்றன என்பதை பயணிகளும் அறிவார்கள். எனவே தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

;