நாகர்கோவில். பிப்.12- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.4.60 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணியும், தலா ரூ.36 ஆயிரம் மதிப்பில் இரண்டு மழைநீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் தலக்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.10800/- மதிப்பில் மூன்று தனிநபர் உறிஞ்சுகுழி அமைக்கும் பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.1.70 லட்சம் மதிப்பில் மூன்று வீடு கட்டும் பணிகள். ரூ.1.40 லட்சம் மதிப்பில் கிடைமட்ட சமுதாய உறிஞ்சு குழி அமைக்கும் பணி, ரூ.9.81 லட்சம் மதிப்பில் திருத்தணிபிள்ளை குளம் கிளை சானல் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கக்கோட்டுத்தலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் தலா ரூ.9300 மதிப்பில் மூன்று தனிநபர் மழைநீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரணியல் முட்டம் - தலக்குளம் சாலை பகுதியில் வள்ளியாற்றின் குறுக்கே எஸ்சிபிஎஆர் திட்டத்தின்கீழ் ரூ.2.5 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி என மொத்தம் 2.72 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.