districts

img

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

இராமநாதபுரம், டிச.31- இராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வியாழனன்று துவக்கி வைத்தார். இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை சார்பில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 12 வரை சிறப்பு கைத்தறி கண்காட்சி இராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு அருகே அமைந்துள்ள ‘‘ஹாஜா’’ மஹாலில் நடைபெறுகின்றது.  இந்த கண்காட்சியில் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை பொதுமக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கே.ஜே.பிரவின்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் உ.திசைவீரன், கைத்தறித் துறை உதவி இயக்குநர் செ.சந்திரசேகரன் உட்பட அரசு அலுவலர்கள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.