மதுரை, டிச.4- ரயில்வே சங்க அங்கீகாரம் தேர்தல் டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி முதல் நாள் வாக்குப்பதிவு துவங்கியது. வாக்குப்பதிவு முதல் நாளிலேயே தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியனைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
பெண்களை கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன் டிஆர்இயு தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழும் என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வன்முறை சம்பவம் நடைபெற்று உள்ளது. இது தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் செயலாகும். மேலும் இன்னும் 2 நாட்கள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் இதுபோல் தேர்தல் நேரத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஆர்இயு மதுரை கோட்ட இணைச் செயலாளர் ஆர்.சங்கரநாராயணன் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மதுரையில் ரயில்வே மனமகிழ் மன்றம், ரயில்வே பள்ளி, ஆபிஸ் ரெஸ்ட் ரூம் ஆகிய மூன்று இடங்களில் டிசம்பர் 4, 5 தேதிகளிலும், டிச. 6ஆம் தேதி ரயில்வே பள்ளியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.