மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடியவிடிய பெய்த கனமழையின் காரணமாக நீர்நிலைகள் பெருகி, விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்ததால், ஆயிரக்காணக்கான ஏக்கர் நெற்கதிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, கீழவளவு, கொட்டாம்பட்டி, அழகர்கோவில், திருவாதவூர், மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை தொடங்கிய கனமழை வியாழன் இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் நிறைந்து உடைப்பு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதன்காரணமாக மேலவளவு சூரகுண்டு மற்றும் மேலூரை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்கதிர்கள் மழை நீரால் மூழ்கியது, மேலும், பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் இந்த மழை நீர் புகுந்ததால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் கனமழையின் போது நீர்நிலைகள் பெருகி மழை நீரானது குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய விளை நிலங்களிலும் புகுவதற்கு காரணம் நீர் நிலைகளின் வரத்து கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.