districts

இலக்கிய மாமணி விருதுக்கு தேர்வு செய்ய குழு: அரசாணை வெளியீடு

சென்னை, டிச. 22- இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இயல், இசை, நாடகம் என்னும் பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு, கலை பண்பாட்டுத்துறை சார்பில், ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 97ஆவது பிறந்த நாள் விழாவில், தமிழறிஞர் மூவருக்கு, ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் தினத்தில் விருது வழங்கும் வகையில், தகுதியானோரை தேர்வு செய்ய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைத்தும், உறுப்பினர் செயலாளராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேரை உறுப்பினர்களாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதாளர்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாய், பாராட்டு பத்திரம், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்க ரூ.17,10,000 நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.