திருநெல்வேலி, ஜூன் 27- இந்திய மாணவர் சங்கத்தின் நெல்லை மாவட்ட மாநாடு தியாகராஜநகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல்கலைக்கழக கிளை உறுப்பினர் கலையரசன் தலைமை தாங்கினார், சங்கீதா வரவேற்புரையாற்றினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஜாய்சன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாணவர் சங்கத்தின் எதிர்கால பணிகள் குறித்து சஞ்சய் முன்மொழிந்தார். பேராசிரியர் கோமதிநாயகம் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நெல்லை மாவட்டத்தில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப் பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர் பேரவை தேர்தலை நடத்திட வேண்டும், தூய சவேரியார் கல்லூரியில் நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களுக்கு இடையிலான பிரச்சனையை பேசி முடிவு காண வேண்டும் , அரசு விடுதிகளில் தரமான உணவு வழங்க வேண்டும், அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும், தனியார் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை தடுத்திட அதனை முறைப்படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக சங்கீதா, செயலாளராக சஞ்சய் ,மாவட்ட துணைத் தலைவர்களாக ஐயம்மாள் , அஜீஸ் , துணைச் செயலாளர்களாக நித்திஷ் , கலையரசன் உட்பட 25 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.