பாபநாசம்,மார்ச் 25- அம்மாபேட்டை அடுத்த உக்கடை கிராமத்தில் எண்ணெய் பனை வயல்களை வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டங்கள்) ஈஸ்வர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் அவர் கூறுகையில், வேறு எந்த பயிருக்கும் இல்லாத வகையில் மாத வருமானம் ஈட்டிக் கொடுக்கும் எண்ணெய் பனை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நடவு முதல் அறுவடை வரை அனைத்து இனங்களுக்கும் அரசின் மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதியதாக நடவு செய்யப்படும் எண்ணெய் பனை கன்றுகளுக்கு நடவு மற்றும் பராமரிப்பு மானியம், ஊடுபயிர் சாகுபடி மானியம் ஆகியவை மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. நான்காம் ஆண்டு முதல் எண்ணெய் பனை காய்ப்புக்கு வரத் துவங்கி விடும். பழக்குலைகளை அறுவடை செய்து என்ணெய்பனை நிறுவனத்திற்கு வழங்கும்போது, ஆண்டிற்கு 8 டன்களுக்கு மேல் கொடுக்கப்படும் பழக்குலைகளுக்கு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது தவிர சந்தை தலையீடு திட்டத்தின் கீழ் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே தற்போது நிலவி வரும் ஆள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எண்ணெய் பனை சாகுபடியை அதிகமான விவசாயிகள் மேற்கொண்டு பயனடைய வேண்டும் என்றார். ஆய்வின்போது அம்மாபேட்டை வேளாண் அலுவலர் அலுவலர்கள் பிரியா, மனோகரன், உதவி அலுவலர் சூரிய மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.