மதுரையில் 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மினி பேருந்து ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன்(40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். மினி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், அதே பேருந்தில் அடிக்கடி பள்ளிக்கு பயணம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அந்த மாணவி 4 மாத கர்ப்பிணியானதால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் அந்த மாணவி கூறியதையடுத்து மாணவியின் தாயார் தங்கபாண்டியன் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மாணவியின் தாயார் புகார் அளித்ததின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கில் ஓட்டுநர் தங்கபாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.