மானாமதுரை, பிப்.16- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி 18-ஆவது வார்டு பர்மா காலனி பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பாடுபடுவேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18-வது வார்டு வேட்பா ளர் ஜெகதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். மானாமதுரை நகராட்சி 18வது வார்டு திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஜெகதா விஜயகுமார் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: மானாமதுரை நகர் மன்ற தேர்தலில் 18-வது வார்டு பகு திக்கு போட்டியிடுகின்ற நான் இப்பகுதியின் வளர்ச்சிக்காக நேர்மையோடு ஊழலற்ற செயல்படுவேன். இப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள தாக மாற்றுவேன். காட்டுநாயக்கன் மக்கள் குடியிருப்பில் ஒரே வீட்டிற்குள் மூன்று, நான்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன். மேலும் இப்பகுதி அடிப்படை வசதிகளுக்காக மானாமதுரை நகர் மன்றத்தில் நேர்மையான முறையில் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.