நாகர்கோவில். டிச.20- இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட 55 தமிழக மீனவர்கள் மற்றும் 8 விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மற்றும் தமிழ்நாட்டு முதல்வரை வலியுறுத்தி மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 18-12-2021 ல் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அன்று இரவு மீன்பிடித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படையினர் வந்து பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடி வலைகளை பறித்து அவற்றை வெட்டி, சேதப்படுத்தி கடலில் வீசியுள்ளனர். மீனவர்களின் மீன்பிடி படகுகள் மீது மோதுவது போல் இலங்கை கடற்படையின் கப்பலை அதிவேகமாக ஓட்டி வந்து அச்சமூட்டியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி தங்கச்சிமடத்தை சார்ந்த மீனவர்கள் லெவல் தாஸ், லியோ, சார்லஸ் பெர்னாண்டோ, செல்வம், வினால்டன் ஆகியோரது 6 விசைப்படகுகளையும் அதில் இருந்த 43 மீனவர்களையும் இரவோடு இரவாக சிறைபிடித்து அவர்களை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஊர்க்காவல் துறை நீதிபதி முன் ஆஜர்படுத்தி 31ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் காவலில் தனிமைப்படுத்தி துன்புறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இச்செய்தி இராமேஸ்வரம் பகுதியில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் மண்டபம் தெற்கு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மன்னார் வளைகுடாப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம், சவரிராஜ் இவரது சகோதரர் அருளானந்தம் ஆகியோரது விசைப்படகை சுற்றி வளைத்து இரண்டு விசைப்படகுகளிலிருந்த 12 மீனவர்களையும் படகுகளுடன் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று சிறை வைக்கப்பட்டுள்ளனர். மாதம் தோறும் இலங்கை கடற்படையால் அத்துமீறி தமிழக மீனவர்களை மீன்பிடி தொழிலிலிருந்தே அப்புறப்படுத்தும் அரசியல் சூழ்ச்சியின் பின்னணியில் இலங்கை இராணுவம் செயல்பட்டு வருவது மிகப்பெரும் கண்டனத்துக்குரியதாகும். ஒன்றிய அரசு இலங்கை, இந்திய அரசுமுறை உறவுகளை பயன்படுத்தி இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படையை அதிகமாக நிறுத்தி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 55 பேரையும் 8 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியு சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசிடம் கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.