தூத்துக்குடி, ஜூலை 8 தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.4.10 கோடி மதிப்பில் 12000 பயனாளிகளுக்கு கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் புதிய திட்டத்தினை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சிக்குட்பட்ட கால்நடை மருந்தகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சினையுறா பசுக்களுக்கான சிகிச்சை மற்றும் கறவைப்பசுக்களில் மடிநோய் கண்டறிதல் முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ரூ.4.10 கோடி மதிப்பில் 12000 பயனாளிகளுக்கு கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் புதிய திட்டத்தினை மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் பேராசிரியர் சு.மீனாட்சிசுந்தரம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் பதிவாளர் முனைவர் பா.டென்சிங் ஞானராஜ்,கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சீ.ராஜன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், ஒன்றியக்குழு உறுப்பினர் மகாராஜா, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், திருந்செந்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் து.செல்வகுமார், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.