அருப்புக்கோட்டை, நவ.12- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தும்முசின்னம்பட்டி அரசுப்பள்ளியில் படித்து, நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்றதன் மூலம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வான மாணவிக்கு பள்ளி சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. தும்முசின்னம்பட்டி அருகே இராஜகோபாலபுரம் கிராமத்தில் வசிக்கும் செல்வம் என்பவரது மகள் மாதவி.ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் அருகிலுள்ள தும்முசின்னம்பட்டி அரசுப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புப் படித்து முடித்து நீட் தேர்வு எழுதினார்.அத்தேர்வில் அவர் 390 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்று, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தேர்வானார்.இதனால் அவரது ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த அவருக்கு பள்ளி சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் கார்த்திக் வரதராஜன் தலைமை வகித்தார்.மாணவி மாதவியின் வகுப்பு ஆசிரியர்களும்,பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களும் , சக மாணவ,மாணவியரும் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பள்ளி மாணவி மாதவிக்கு சிறப்புப் பரிசுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கற்பகம் பாண்டீஸ்வரி, மற்றும் திரளான பொதுமக்களும் நேரில் கலந்து கொண்டனர்.