சீரமைத்து, பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
மதுரை மாநகராட்சி 22-வது வார்டில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 50 ஏக்கரில் கோச்சடை கண்மாய் உள்ளது. கண்மாயின் கொள்ளளவு 10.5 மில்லியன் கன அடி. இதை நம்பி 96.36 ஏக்கர் விவசாய பாசனம் உள்ளது. வைகை ஆற்று தண்ணீர் துவரிமானில் இருந்து 2 கி.மீ. கால்வாய் வழியாக கோச்சடை கண்மாய்க்கு வந்தது. தற்போது இந்த கண்மாய் பாசன நிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால் கண்மாயின் தேவை குறைந்துவிட்டது. அதனால் 20 ஆண்டுக்கு முன் கண்மாயை பொதுப்பணித் துறை சீராமைக்கும் பணியினை கைவிட்டது. தொடர்ந்து பராமரிக்கப்படாததால் கண்மாய்க்கு வரக்கூடிய கால்வாய் பகுதி உயரமாகி நீர் வழிப்பாதைகள் தூர்ந்து போய்விட்டது. கண்மாய் மற்றும் நீர்வாழிப்பாதைகளை தூர்வாராததால் மழை நீரை தேக்க முடியாமல் பாசன நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டது. கோச்சடை கண்மாயை சீரமைத்து பராமரிக்க உயர் நீதிமன்றம் மாநகராட்சிக்கு ஏற்கெனவே உத் தரவிட்டது. ஆனால் மாநகராட்சியே குப்பையை கொட்டும் அவலத்தால் ஒரு நீர்பிடிப்பு பகுதி சுகாதார சீர்கேட்டின் மையப்பகுதியாக மாறியுள்ளது . இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கு கீழே சென்றுவிட்டது. தற்போது பெய்த மழையில் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும் மதுரையில் சில கண்மாய்கல் நிறைந்தும் மதுரை மாநகராட்சியின் முகத்துவாரத்தில் உள்ள கோச்சடை கண்மாய்க்கு ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விசயம். இப்படி கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாததால் சில தனியார் நிறுவனங்கள் கூட தங்களுடைய கட்டுமான கழிவுகள் மற்றும் பழைய பொருட்களை வாங்கக்கடிய கடைக்காரர்கள், பழுதடைந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து கண்ணாடி கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள்.
நிலத்தடி நீர்மட்டம் உயர....
இதனால் கண்மாய் பகுதியை மாநகராட்சி நிர்வாகம் அறிவிக்காத குப்பை கொட்டும் மையமாக மாறியுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கண்மாய்களை தூர்வாரி நீர் தேக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சில கண்மாய்களை தொடர்ந்து நீர் தேக்கி சுற்றுலா மையமாக மாற்றுவதற்கும் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கூறி வருகிறது. அந்த அடிப்படையில் கோச்சடை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கோச்சடை கண்மாயினை சுத்தப்படுத்தி அதில் தொடர்ந்து நீரை தேக்கினால் கோச்சடை மட்டுமன்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். அருகில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வரும் கழிவு நீரை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள மாநகராட்சியும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் செய்திட வேண்டும்.
கண்மாய் கரையில் மரங்களை நட்டு நடைபயிற்சி பூங்காவாக உருவாக்கினால் இப்பகுதி மக்களுக்கு இது மிகப் பெரும் பயனுள்ளதாக அமைந்திடும். மாநகராட்சி நிர்வாகமும் இங்கு குப்பை கொட்டுவதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு 1 ஆம் பகுதிக்குழு செயலாளர் கு. கணேசன் கூறுகையில் “சாந்தி சதன் என்ற தனியார் குடியிருப்பு வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றார்கள். அவர்களுடைய மனித கழிவுகள் கோச்சடை கண்மாய்க்குள்தான் செல்கிறது. மாநகராட்சியின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. கண்மாய் பராமரிக்கப்படாமால் உள்ளதால் அதில் ஆக்கிரமிப்பு நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது. கண்மாயில் நீர்த்தேக்கினால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளை அப்புறப்படுத்தி மழை நீர்தேக்கத்திற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
-ஜெ.பொன்மாறன்