districts

img

திருநெல்வேலி, தென்காசியில் தொடர் மழை

திருநெல்வேலி நவ 18- வடகிழக்குப் பருவமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  அணைப்பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 85.2, மில்லிமீட்டர், குண்டாரில் 56.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. தென்காசி, ஆய்க்குடி, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், சங்கரன்கோவில் மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளான சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு, கொடுமுடியாறு, நம்பியாறு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம்  89 அடியாக இருந்து இரண்டு அடி உயர்ந்து 91 அடியாக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு அடி அதிகரித்து 93.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,602.20 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 517.25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 15-ஆம் தேதி 93 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக தலா ஆறு அடி உயர்ந்தது. இந்நிலையில்  மேலும் இரண்டு அடி  அதிகரித்து 111.61 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த நான்கு நாட்களில் 21 அடி உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணைநீர்மட்டம் வெள்ளிக்கிழமை 70.35 அடியாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனா நதி அணையின் நீர்மட்டம்  83 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் இரண்டு அடியே உள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 81அடியாக உள்ளது. 132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம்  63 அடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 21 அடி உயர்ந்து 84 அடியாக உள்ளது. 72.10 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 2 அடி உயர்ந்து 59.77 அடியாக உள்ளது. இதேபோல் குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

 தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்   கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். தாமிரபரணி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 60 முதல் 65 சதவீதம் தான் நீர்மட்டம் உள்ளது. தற்போது பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் சற்று கூடுதல் தண்ணீர் சென்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மஞ்சள் நிறத்தில் சேறு கலந்த தண்ணீர் சென்றது. இதனால் வழக்கம்போல் ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள் வெள்ளம் வந்து விட்டதோ என்று வியப்புடன் பார்த்தனர். தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் இருந்து வடிந்து வரும் மழைநீரால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.