districts

img

சாதனைச் சிறுவன்!

மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் 4ஆவது படிக்கும் மாணவன் இறகுப்பந்து போட்டியில் சாதனை படைத்து வருகிறார். அவர் பங்கேற்ற 40 போட்டிகளில் 31 போட்டிகளில் வென்றுள்ளார். மதுரை மட்டுமல்லாது, திருமங்கலம், திருநெல்வேலி, சிவகாசி, கன்னியாகுமரி, காரைக்குடி, போடி, ஓசூர் பல நகரங்களிலும் நடந்த பல்வேறு நிலைகளிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மாநிலங்களுக்கு இடையிலான சப் ஜூனியர் ஜுனியர் இறகுப்பந்து போட்டி, மாநில அளவிலான இறகுப்பந்து சாம்பியன் பாட்டி உள்ளிட்டவையும் அவர் பங்கேற்றுள்ள போட்டிகளில் அடங்கும்.

“என் பெயர் அப்துல்லா. எனது தந்தை பெயர்  ஈ.சுலைமான். எனது பூர்வீகம் மதுரை  மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள தொட்டப்பநாயக்கனூர் என்னும் மலையடி கிராமமாகும். எனது தாத்தா ஒரு விவசாயி. எட்டாம் வகுப்பு வரை படித்த எனது தந்தை தனது ஆரம்ப நாட்களில் மளிகைக் கடையில் வேலை பார்த்தார். திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் வெளிநாட்டில் சென்று வேலை பார்த்தார்கள். நான் பிறந்ததற்குப் பிறகு மதுரை வில்லாபுரம் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறோம். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், நான்தான் கடைசிப்பையன்.  எனது தந்தை சிறிதாக மொபைல்சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். எனக்கு மூன்றரை வயது இருக்கும் போது எனது தந்தை உடற்பயிற்சிக்காக வீட்டருகில் இருக்கும் இறகுப் பந்து மைதானத்திற்கு விளையாடச் செல்வார்கள்.

அப்படி விளையாடச் செல்லும் போது கூடவே என்னையும் அழைத்துச் செல்வார். ஆரம்ப நாட்களில் எனது தந்தை விளையாடுவதையும், எனது தந்தையுடன் விளையாடுபவர்கள் விளையாடுவதையும் ஆர்வமுடன் பார்ப்பேன். அதுவே நாளடைவில் எனக்கும் இறகுபந்து விளையாட்டின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. எனது தந்தையும் அவரது நண்பர்களும் விளையாடுவதைப் பார்த்து அவர்களைப் போன்றே வெறும் கைகளாலேயே இறகு பந்துகளை அடிப்பதைப் போன்று பாவனைகள் செய்ய ஆரம்பித்தேன்.எனது கைகளை பேட்டாக கற்பனை செய்து கொண்டு காற்றில் நான் அப்படி அடித்து ஆடுவதை தொடர்ந்து கவனித்து வந்த எனது தந்தை. ஒரு பயிற்சியாளரிடம் அறிமுகப்படுத்தினார் உடனே ஒரு பழைய பேட்டை கொடுத்து ரோப்பில் இறகுப்பந்தை கட்டி தட்டச் சொன்னார்கள். அப்படி ஒரு இரண்டு வருடம் தட்டி இருப்பேன் ஒரு நாள் கோச் சரவணன் சார் என்னை மைதானத்திற்கு அழைத்து ஆரம்பப் பயிற்சி அளித்தார். அதுதான் இந்த விளையாட்டில் இத்தனை வெற்றிக்கும் காரணம். கிட்டத்தட்ட 7 வருடமாக ஒரேபயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று வருகிறேன். 

மேலும் எனக்கு ஆர்வம் ஏற்பட காரணம் பயிற்சியாளர் சரவணன் சார் மற்றும், நவீன் சார்தான் அர்ப்பணிப்போடு தான் நேரம் காலம் பாராமல் பயிற்சி அளித்தார்கள். ஊக்கமளித்தார்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு தன்னம்பிக்கை யையும் விளையாட்டின் தந்திரங்களையும் சொல்லித்தந்தார்கள். அதை பின்பற்றி இன்று வரை வெற்றி பெற்றுவருகிறேன்.  அதே போன்று என் உடன் பயிற்சி பெறும் சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் உற்சாகமும் ஊக்கமும் அளித்தார்கள்.  நான் மதுரை கோ.புதூரில் உள்ள அல்-அமீன் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்துவருகிறேன். இதுவரை 40 போட்டியில் கலந்து கொண்டு 31 கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் பெற்றுள்ளேன். நான் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப் பெற்ற பரிசுகளையும், சான்றிதழ்களையும் கொண்டு சென்று காண்பிப்பேன். அப்போது பள்ளியிலுள்ள அனைத்து ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஆகிய அனைவரும் எனது சான்றிதழ்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்து மென்மேலும் நான் அதிக போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று என்னை உற்சாகப்படுத்துவர்”