பூமி பூஜை போட்ட
அந்த
பொட்டல் கடந்தே எனது
கட்டாய நடைப்பயிற்சி!
ஆவிகளை
கண்டாங்கிக் கொசுவமும்
முண்டாசு மடிப்பும்
மாறி மாறிச் சிறைவைத்த
கிராமத்துக் கிளியிரண்டின்
கைச்சிறகில்
கட்டிடப் பராமரிப்பு!
கடப்பாரை கிழித்த
கால்கட்டோடு
சாலை சரியும்
ஜல்லி, மணல்களைச்
சொல்லிய இடத்தில்
உட்கார வைப்பது....
எண்ணி அடுக்கிய
செங்கல் மார்பில்
சுண்ணச் சந்தனம் தெளிப்பது.....
சேர்த்து வைத்த
ஜன்னல்
நிலைக் கதவுகளுக்கு
சங்கிலி விலங்கிடுவது....
சிந்துங் கலவைச்
சேதாரம் தவிர்ப்பதென
ஊரார் மனையை
ஊட்டி வளர்த்தனர்.
மூத்திரம், சாணம் ஒழுக
மும்மூர்த்திகள் அம்சமென
புதுமனை புகுந்த
பசு கழுத்தில் சூட்டிய
துண்டு மாலை கூட
மாடாய் உழைத்த
ஜோடிகளுக் தில்லை!