விருதுநகர், ஏப்.28- விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரம் ரயில்வே கேட் முதல் ஆமணக்கு நத்தம் வரை உள்ள சாலையில் நாள்தோறும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது. மேலும், விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலையில் ஆர்.ஆர்.நகர் உள்ளது. இங்குள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் மட்டும் அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கிழக்குப் பகுதியில் தற்போது வரை அணுகு சாலை இல்லை. இதனால், மேம்பாலத்தில் ஏராளமான விபத்துகள் நடைபெற்று பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, ஆவுடையாபுரம் கேட் முதல் ஆமணக்கு நத்தம் வரையுள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும். ஆர்.ஆர்.நகர் மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் அணுகுசாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி பலமுறை அரசு நிர்வாகத்திடம் முறையிட்டும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இக்கோரிக்கை களை வலியுறுத்தி பொம்மையாபுரம் முதல் ஆர்.ஆர். நகர் வரை நடை பயணம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எஸ்.சேதுராமசாமி, கே.கனக லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துமுனியாண்டி, டி.ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எல்.முருகன் விளக்கிப் பேசினர். இதில், கே.ஆரோக்கியராஜ், பாண்டி, சரஸ்வதி, சக்கதேவி, குமார், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.