districts

img

உரிமைகளை வென்றெடுக்க கருப்பும் சிவப்பும் கைகோத்துப் பயணிக்கும்!

தோள் சீலை போராட்ட  200 ஆம் ஆண்டு நிறைவு

தீக்கதிர் சிறப்பிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

போராடிப் பெறுகின்ற உரிமைகளின் தடயங்கள் வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. சாதி ஊடுருவிய சமூக வாழ்வில் ஒவ்வொரு மனிதரும் தன் உரிமைகளைப் போராடித்தான் பெற்றாக வேண்டும். போராட்ட உணர்வற்ற மக்களிடமும் அந்த உணர்வினை ஊட்டி, உரிமை முழக்கமிடச் செய்யும் வலிமை புரட்சிகரமான இயக்கங்களுக்கு உண்டு. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வாழ்வளிக்கும் அறிவாயுதம் ஏந்திப் போராடுவதுதான் புரட்சி. சாதி என்ற சொல் தமிழ் மொழியின் வழக்கில் இல்லை என்பதையும், சதி என்ற சொல்லுக்கு கால் முளைத்து, சாதி என்றாகிவிட்டது என்றும் முத்தமிழறிஞர் கலைஞர்  எடுத்துரைத்திருக்கிறார். சமுதாயத்தில் இயல்பாக நிலவும் ஒற்றுமைக்கு எதிரான சதியே, சாதி ஒடுக்குமுறைகளாகும். அப்படிப்பட்ட ஓர் ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழையும் மலையாளத்தையும் தாய்மொழிகளாகக் கொண்ட திராவிட மக்கள் கொதித்தெழுந்து போராடிய உரிமை வரலாறுதான் தோள்சீலைப் போராட்டம்.

பல நூறு ஆண்டுகளாக சாதிப் படிநிலையைக் கொண்டது இந்தியச் சமூகம். அதன் சாதிய ஒடுக்குமுறைகளால் கல்வியைப் பெற முடியாமல் இருந்த சமூகங்கள் உண்டு. தகுதியிருந்தும் உரிய வேலை செய்ய முடியாத சமூகங்கள் உண்டு. பொதுக்குளத்தில், பொதுக்கிணற்றில் தண்ணீர் குடிக்க முடியாமல் சில சமூகங்கள் இருந்த நிலை உண்டு. சாலையில் நடக்கவும், பேருந்தில் பயணிக்கவும் உரிமையற்றிருந்த சமூகங்கள் உண்டு. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றுதான் உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் சொல்வார்கள். ஆனாலும், அந்த ஆண்டவனை வழிபடுவதற்கான கோயிலுக்குள் நுழைய முடியாமல் விலக்கி வைக்கப்பட்டிருந்த சமூகங்கள் உண்டு. பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்ற கொடுமைக்குள்ளான சமூகங்கள் உண்டு. ‘’உயர்ந்த சாதி’ எனத் தம்மைக் கருதி வாழ்ந்தவர் முன்பாக, பிற சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடை உடுத்திக்கொண்டு நிற்கக்கூடாது என்ற மிகக் கொடூரமான ஒடுக்குமுறை அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் பகுதிகள்) நிலவி வந்தது. ஏறத்தாழ 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் இந்தக் கொடுமையான வாழ்க்கைமுறைக்கு உள்ளாயினர், அவர்களில் தமிழ் பேசும் சாதிகள் உண்டு. மலையாளம் பேசும் சாதிகள் உண்டு. தாய்மொழி எதுவாக இருந்தாலும் ஒடுக்குமுறை என்பது ஒன்றுதான்.

1823 இல்...

தங்கள் உடைக்கான உரிமையை அவர்கள் உரக்க முழங்கினால் அபராதம் விதிக்கப்படும். ஒடுக்குமுறையை மீறி மேலாடை அணிந்தால் வரி கட்ட வேண்டிய சூழலும் இருந்தது. கடுமையான தண்டனையும் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்த்து உருவான ‘தோள்சீலைப் போராட்டம்’ பல கட்டங்களாக நடைபெற்றது. அதில், 1823-ஆம் ஆண்டு முதற்கட்ட வெற்றி கிடைத்தது. பின்னர் 1829, 1859, 1865 ஆகிய காலகட்டங்களில் நடந்த போராட்டங்களின் வாயிலாக அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் மேலாடை உடுத்தலாம் என்ற நிலையை அடைந்தனர். இந்தப் போராட்டக் களத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவர்களின் முன்னெடுப்புகளும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான புதிய சமயநெறியை அவர் உருவாக்கியதும், அது தமிழ் வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டிருந்ததும் கவனத்திற்குரியவை. தோள்சீலைப் போராட்டத்தில் முதற்கட்ட வெற்றி பெற்று 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு மார்ச் 6-ஆம் நாள் நாகர்கோயிலில் நடைபெறும் விழாவில் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களுடன் இணைந்து பங்கேற்கும் நல்வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது. உரிமைப் போராட்ட வரலாற்றை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு தலைமுறையும் அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றைத் திரித்து மோசடி செய்பவர்களின் கைகளில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், உண்மை வரலாற்றை உரக்கப் பேச வேண்டிய தேவையை உணர்ந்து இந்த விழாவினை நடத்துபவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதிபேத சமுதாயத்திற்கு எதிரான சமய சீர்திருத்தவாதியான வடலூர் இராமலிங்க வள்ளலார் தமிழ்நாட்டில் பிறந்து சமத்துவத்திற்கான தனிப்பாதை கண்டார். அதுபோலவே கேரளாவில் நாராயண குரு சமத்துவ சமுதாயத்திற்குப் பாடுபட்டார். வள்ளலாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியான இயக்கங்கள் உருவாகின. அவை உருவாக்கிய சமூக சீர்திருத்தங்களில், திராவிட இயக்கத்திற்கும் தந்தை பெரியாருக்கும் முதன்மையான பங்கு உண்டு. அதே காலகட்டத்தில் கேரளாவில் பொதுவுடைமை இயக்கம் வலிமை பெற்றுச் சமுதாயத்தில் சமத்துவக் கோட்பாட்டை முன்னிறுத்தியது.

அறிவாயுதப் புரட்சி

தமிழ்நாட்டில் கருப்பும், கேரளத்தில் சிவப்பும் மேற்கொண்ட அறிவாயுதப் புரட்சிதான் இன்று இரண்டு மாநிலங்களையும் இந்தியாவின் பல்வேறு துறைகளிலும் முன்னணி மாநிலங்களாக முன்னிறுத்தி இருக்கின்றன. குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்துக்காகத் திராவிட இயக்க வழிவந்த அரசும், பொதுவுடைமை அரசும் நிகழ்த்திய பணிகள் ஏராளம். இந்தியாவுக்கே முன்னோடியாகப் பெண்ணுரிமையை நிலைநாட்டும் விதமாக, சொத்தில் சமவுரிமை வழங்கியது பெண்ணினக் காவலர் கலைஞர் அவர்களது தலைமையிலான கழக அரசுதான். அனைத்துச் சாதியினருக்கும் வழிபடும் உரிமையைப் பெற்றுத் தந்தது மட்டுமல்ல, அனைத்துச் சாதியினரும் அர்ச்சராகவும் சட்டரீதியான போராட்டத்தை மேற்கொண்டு அதில் நமது திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் வெற்றிகண்டு வருகின்றன. இத்தகைய முற்போக்கு முன்னெடுப்புகளை நமது இயக்கங்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. தோள்சீலைப் போராட்டத்தின் இருநூறாவது ஆண்டு நிறைவில், இன்னமும் இந்த மண்ணில் புரையோடிப் போயிருக்கின்ற சாதி ஒடுக்குமுறை உணர்வுகளுக்கு எதிரான போராட்டங்களை சளைக்காமல் தொடரவேண்டியுள்ளது. ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, உரிமைகளை வென்றெடுக்கும் சமத்துவச் சமுதாயம் உருவாகிட கருப்பும் சிவப்பும் கைகோத்துப் பயணிக்க வேண்டிய காலம் இது. தோள்சீலைப் போராட்டத்தின் இருநூறாவது ஆண்டு நிறைவையொட்டித் தீக்கதிர் இதழ் கொண்டு வரும் இச்சிறப்பிதழ், நாம் கடந்த வந்த பாதையையும், இனித் தொடர வேண்டிய பயணத்தையும் உணர்த்தி, அதன் நோக்கத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

அன்புடன்