districts

img

யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்கத் தடை

தேனி, ஆக.3-  யானைகள் நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளனர். சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. இது தவிர ஆண்டு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் நிலையில், யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க புதன்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அருவியில் குளிக்க 2 ஆவது நாளாக தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆடி 18 என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வனத்துறை தடையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  அணைகளின் நீர்மட்டம்  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 121.50 அடியாக உள்ளது. 293 கனஅடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.77 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.96 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.