மதுரை, பிப்.7- 21 மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசு இருந்தபோது என்ன செய்தது. லட்சக்கணக்கான கோடி கடன்களையும், காலியான கஜானாவையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் மட்டுமே விட்டுச் சென்றது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 72,092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:- ‘தூங்கா நகரம்’, ‘கூடல் நகர்’, ‘ஜல்லிக்கட்டு மாவட்டம்’… இப்படி மதுரை உங்களுக்கு மட்டுமல்ல… அனைவருக்கும் நெருக்கமான, பெருமையான மாவட்டம். இது, கண்ணகி நீதி கேட்ட மண். இப்படிப்பட்ட பெருமை கொண்டது மதுரை. செயல்படும் அரசும்-வாயால் வடை சுடும் அரசும் கண்ணகி தனது ஒற்றை கால் சிலம்பை வைத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதி கேட்டாரோ, அதேபோல் கடந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு வந்திருந்த போதுதான் எனக்கும் அந்த ஒற்றைச் செங்கல் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டுதான், தமிழகம் முழுவதும் சுற்றிவந்து தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய-மாநில அரசுகளுக்கு எதிராக நீதி கேட்டு, பிரச்சாரத்தை தொடங்கினேன். 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது இங்குள்ள எய்ம்ஸ் வளாகத்தில் செங்கல்லை எடுத்தேன். ஆனால் இன்னும் கட்டுமானப் பணியை ஒன்றிய அரசு தொடங்கவில்லை. அதன்பிறகு தொடங்கப்பட்ட கலைஞர் நூலகத்தை விரைவில் திறக்கவுள்ளோம். செயல்படும் அரசுக்கும், வாயில் வடை சுடும் அரசுக்குமான வித்தியாசம் இதுதான். ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட்டில்கூட மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி ஒதுக்கவில்லை.
அதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் கையில் எய்ம்ஸ் செங்கல்லை வைத்து போராடினர். 2024- நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் நான் அந்தக் கல்லுடன்தான் செல்லவேண்டும் என நினைக்கிறேன். மதுரை மக்கள் அனைவரும் கையில் செங்கல்லை எடுப்பதற்குள் எய்ம்ஸ் வேலைகள் தொடங்கிவிடும் என நினைக்கிறேன். காலியான கஜானாவும்-அடிமை அரசும் எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகள் வாட்ஸ்அப் வதந்திகள் எங்களுக்கு முன்னால் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. இந்த 21 மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசு இருந்தபோது என்ன செய்தது. லட்சக்கணக்கான கோடி கடன்களையும், காலியான கஜானாவையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் மட்டுமே விட்டுச் சென்றது. தடுமாறிக் கிடந்த தமிழ்நாடு அரசை தலைநிமிரச் செய்தவர் கருணாநிதி ஸ்டாலின். என்றால் அது மிகையல்ல. மதுரைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே திமுக அரசு இந்த 21 மாதங்களில் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் 75 சதவிகிதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். விழா முடிந்த பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக திடல் வாசலில் இருந்து மேடை வரை கரும்புகள், வாழை மரங்களால் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தோரணங்கள் அனைத்தையும் விழாவில் பங்கேற்க வந்த பெண்களும், கட்சித் தொண்டர்களும் ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர்.