திண்டுக்கல், மே 27- 578 மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளதாக திண்டுக்கல் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த மாணவி வேதனையுடன் கூறியுள்ளார். திண்டுக்கல் அடியனூத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வருபவர் சிவக்குமார். சுமைதூக்கும் தொழிலாளியான இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 30 ஆண்டுகளாக இந்த மறுவாழ்வு மையத்தில் வசித்து வருகிறார்கள். சிவக்குமாரின் மகள் சரிதா அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்தார். பொதுத் தேர்வில் 600க்கு 578 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிக்கும் மாணவ, மாணவியர்களில் மாநில அளவில் 2 ஆம் இடமும், இவர் படித்த பள்ளியில் 3 ஆம் இடமும் பிடித்து சாதனை படைத் துள்ளார். பி.காம். இன்பர்மேசன் டெக்னாலஜி ஐ.டி. படிக்க தனக்கு விருப்பம் உள்ளதாக கூறும் மாணவி சரிதா மேற்படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த துறை திண்டுக்கல்லில் இல்லாததால் மதுரையில் சென்று படிக்க வேண்டியுள்ளது. தனது தந்தை சுமை தூக்கும் தொழிலாளி என்பதால் தனது மேற்படிப்பை தொடர பெரும் சிரமம் இருப்பதாக வேதனையுடன் தெரி வித்துள்ளார். (ந.நி.)