districts

img

மேலவளவு தியாகிகளின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம் முதல் குரல் சங்கரய்யாவின் குரல்

மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள மேலவளவு ஊராட்சியில் தலைவர் பதவி 1996-ஆம் ஆண்டு பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பட்டியல் சாதியினர் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என மற்றொரு சமூகத்தினரால் மிரட்டப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1996 அக்டோபர் 9, 1996 டிசம்பர் 28  ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு பின்னர் 1996 டிசம்பர் 31-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் முருகேசன் வெற்றி பெற்றார். மேலும் தனக்கும், தான் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.  இந்நிலையில் 1997- ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பும்போது ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் ஆகியோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலை துண்டிக்கப்பட்டு, அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசி எறியப்பட்டது. பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த கிராமத்திற்கு முதலில் சென்ற தலைவர் என்.சங்கரய்யா. அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவர் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா.

சிபிஎம் கோரிக்கையை ஏற்ற கலைஞர் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தீவிரப் போராட்டங்களை துவக்கிய மார்க்சிஸ்ட் கட்சி, அரசும் களத்தில் இறங்க வேண்டும் என்று கோரியது. கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 1997- ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில், என். சங்கரய்யா பேசினார். அப்பொழுது, தீண்டாமை முற்றாக ஒழிய தீவிர நிலச்சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டுமானால், கிராமப்புற சமூக-பொருளாதார நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்; அதற்குத் தீவிர நிலச்சீர்திருத்தத்தை அமலாக்க வேண்டும் என்றார். தமிழகத்தின் அரசியல் கேந்திரமான மதுரையில் நடைபெற்றுள்ள இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறிய சங்கரய்யா, ‘   ‘இந்தியாவின் குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் 95 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை குடியரசுத் தலைவராக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் மேலூருக்கு அருகில் மேலவளவு ஊராட்சியில் பட்டியலின  மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அந்த ஊராட்சியில், போட்டியிட்டு வெற்றிபெற்று பொறுப்பேற்ற முருகேசனும் அவருடன் ஐந்து பேரும் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவரை ஊராட்சித் தலைவராக ஏற்க மறுத்த ஆதிக்க சக்திகள் அவரை படுகொலை செய்துள்ளன. நான் அந்த கிராமத்திற்குச் சென்றிருந்தேன். முருகேசனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த கிராம மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர். என்ன கொடுமை இது? சுதந்திர பொன்விழாவினை கொண்டாடும் இந்தத் தருணத்திலும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தொடரவே செய்கிறது. பட்டியலின மக்கள் காலில் செருப்பு போட்டு நடக்க முடியவில்லை. பட்டியலின  மக்களுக்கு தனி கிளாசில் டீ தரப்படுகிறது. இந்தக் கொடுமைக்கு எதிராக வலுவான மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். பட்டியலின  மக்களுக்கு தனி கிளாசில் டீ தரும் கடைகளின் முன்பு மக்களே சத்தியாகிரகம் நடத்த வேண்டும். இத்தகைய தீண்டாமை உள்ள இடங்களைக் கண்டறிந்து தமிழக அரசும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று முழங்கினார். மேலும் சங்கரய்யா தொடர்ந்தார்:  சுடுகாடு, இடுகாடு போன்றவை உள்ளாட்சி, நகராட்சி போன்ற அமைப்புகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அனைவருக்கும் ஒரே சுடுகாடு, இடுகாடு என்று அறிவித்து தைரியமாக அமலாக்க வேண்டும். இப்போது ஏற்படுகிற கலவரங்களுக்கு என்ன காரணம்? கிராமப்புறங்களில் பட்டியலின மக்கள் தங்களுக்கு ‘சமூக அங்கீகாரம்’ கிடைக்கவில்லை என்று குமுறுகின்றனர். டீக்கடைகளில் தனிக்கிளாஸ், பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் குளங்களில் கூட தண்ணீர் எடுக்க, குளிக்க அனுமதி மறுப்பு போன்றவைகளால் பட்டியலின மக்கள் வேதனையடைகின்றனர். இது என்ன நியாயம்? தீண்டாமை சட்டப்படி குற்றம். ஆனால் சட்டம் அமலாகிறதா? இந்த மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் வாசிக்க மாநாட்டில் அனைவரும் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டோம். இந்த உறுதி மொழியை பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அரசாணை வெளியிட முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று பேசினார் என்.சங்கரய்யா.

கம்யூனிஸ்ட்டுகளின் உறுதிமிக்க போராட்டம் 
தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளையும், மனிதநேய, மனித சங்கிலிகளையும் மாவட்டம்தோறும் நடத்த வேண்டும். ஒரு தீவிரமான கருத்து பிரச்சாரம் நடத்த வேண்டும். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். தீண்டாமைக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதுணையாக நிற்கும் என்றும் கூறினார். சங்கரய்யா, 1997 ஜூலை 10 அன்று அந்த கிராமத்திற்குச் சென்றார். 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆண்டுதோறும் மார்க்சிஸ்ட் கட்சி மேலவளவு தியாகிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறது. அந்த வகையில் வியாழனன்றும் அஞ்சலி செலுத்தியது.