புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களின் தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் ரங்கசாமி வென்ற தொகுதியான தட்டாஞ்சாவடியில் பாஜக வேட்பாளரை விட இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் 3403 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் தேனி ஜெயக்குமார் தொகுதியான மங்கலத்தில் பாஜகவை விட காங்கிரஸ் 898 கூடுதல் வாக்குகள் பெற்றது.
அதேபோல் பாஜக வேட்பாளரான அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவையில் போட்டியிட்ட தொகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதியிலும் பாஜக 595 வாக்குகள் பின்தங்கியது. ராஜ்பவன் தொகுதியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொகுதியில் 2848 வாக்குகள் கூடுதலாக காங்கிரஸ் பெற்றிருந்தது.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் திருமுருகன் தேர்வானார். இவர் தொகுதியில் 4149 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. அதேபோல் பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார் வென்ற ஊசுடு தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.
பேரவைத்தலைவர் செல்வத்தின் மணவெளித்தொகுதி தொடங்கி பல்வேறு பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அவர்களின் ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதிகளில் காங்கிரசே கூடுதலாக வாக்குகளை பெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். தற்போது மக்களவைத் தேர்தலில் தற்போதைய முதல்வர், அமைச்சர்களின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வாக்கு சரிந்த ரங்கசாமி
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அதிக முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூடுதலாக வாக்குகளைப் பெற்று இருப்பது, புதுச்சேரி மக்களிடத்தில் ரங்கசாமிக்கு இருந்த செல்வாக்கு குறைந்துள்ளதையே காட்டுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தி போர்க்கொடி தூக்கினார்கள். அப்போது தொண்டர்களின் முடிவை பொருட்படுத்தாமல்,பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிந்து முதல்வர் ரங்கசாமி கூட்டணி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.