districts

மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மனைவியை மீட்டுத் தர வேண்டும் ஆட்சியரிடம் கணவர் கோரிக்கை

புதுக்கோட்டை, அக்.17 - வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மனைவியை மீட்டுத் தருமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் திங்கள்கிழமை கணவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங்குறிச்சியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வெண்ணிலா என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1.9.2022 அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற எனது மனைவியைக் காணவில்லை. எனது மனைவியைத் தேடி விசாரித்த போது குரும்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற ஏஜெண்ட் மூலம் மலேசியாவுக்கு சென்றுள்ளது தெரியவந்தது. நல்ல சம்பளம் என்று ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற சுரேஷ்குமார், எனது மனைவியை விற்றுவிட்டது பிறகுதான் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது எனது மனைவி மலேசியாவில் துன்புறுத்தப்படுவதாகவும், தன்னை மீட்க வேண்டும் எனவும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் பேசி அழுதுள்ளார். இதனால், நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் உள்ளோம். எனவே, எனது மனைவி வெண்ணிலாவை மீட்டுத் தர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

;