பொன்னமராவதி, டிச.31- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் கொன்னையம்பட்டி ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் வெள்ளக்கண்ணு என்பவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை ஆறு மாதத்திற்கு முன்பு மின்வாரியம் ரத்து செய்தது. மேலும் மின்வாரியத்தில் புதிதாக மின் இணைப்பு வழங்க விண்ணப்பித்த வெள்ளக்கண்ணு வீட்டிற்கு, ஊர்க்காரர்கள் சிலரின் எதிர்ப்பால் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் வெள்ளக்கண்ணுவின் குழந்தைகள் படிக்க முடியாமல் முடங்கியுள்ளனர். எனவே, வெள்ளக்கண்ணுவின் வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் காரையூர் மின்வாரிய அலுவலகம் முன்பு டிசம்பர் 28 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளியன்று பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காவல்துறை பாதுகாப்புடன் வெள்ளைக்கண்ணு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.நல்லதம்பி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.