புதுக்கோட்டை, ஜுன் 8 - புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன் விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான வாலிபால் போட்டி அடுத்த மாதம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் ஜூலை 8 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் இரவு நேரத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி யில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக அணிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதில், ஆண்கள் பிரிவில் கேரளா காவல்துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஜிஎஸ்டி, பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்து கொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கேஎஸ்இபி அணி, கேரளா காவல்துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. போட்டி யில் ஒரே நேரத்தில் சுமார் 3,500 பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அண்ணா கைப்பந்து கழகத்தினர் செய்து வருகின்றனர்.