புதுக்கோட்டை, மே 29 - புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார்திடல் மற்றும் விராலிமலை ஒன்றியம் ஆவூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெற்ற போட்டியை புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 758 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்குவதற்கு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 46 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 8 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆவூர்
விராலிமலை ஒன்றியம் மாத்தூர் அருகே ஆவூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களமிறக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 4 பேர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்கண்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.