districts

img

எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது வழங்க தமுஎகச கோரிக்கை

புதுக்கோட்டை, மே 17 - தமிழ்நாட்டிலிருந்து முதல் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் பெயரில் சிறந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை நகரக் கிளை மாநாடு புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு எழுத்தாளர் சுரேஷ்மான்யா தலைமை வகித்தார். கவிஞர் மு.கீதா தலைமையில் விவாத அரங்கம் நடைபெற்றது. கவிஞர் ஜீவி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் நடந்த கருத்தரங்கிற்கு பாடலாசிரியர் இரா.தனிக்கொடி தலைமை வகித்தார். கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் தொடக்கவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் பூபாளம் பிரகதீஸ்வரன் கருத்துரை வழங்கினார். மாநாட்டில் தலைவராக கி.ஜெயபாலன், துணைத் தலைவர்களாக மு.கீதா, காசாவயல் கண்ணன், செயலாளராக சு.பீர்முகமது, இணைச் செயலாளர்களாக புதுகை புதல்வன், டெய்சிராணி பொருளாளராக க.உஷாநந்தினி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் உரையாற்றினார்.  தமிழ்நாட்டிலிருந்து முதல் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அகிலன் பெயரில், சிறந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும். புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அவரது பெயரில் பெயர் பலகை வைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை அந்தந்தப் பகுதியில் உள்ள நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.