புதுக்கோட்டை/ தஞ்சாவூர், ஏப்.17 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 33 பேர் காயமடைந்தனர். ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தொடங்கி வைத்தார். இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 636 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில் 33 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்து மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
முள்ளங்குறிச்சி
கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சியில் முள்ளங்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் (பொ) ரவி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 762 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் 56 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 8 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் சனிக்கிழமை காலை ஜல்லிக்கட்டு விழா நடந்தது. இதை எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சை டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சி வடக்குகுளத் தெரு திடலில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர், வல்லம், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் பதிவு செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை, தஞ்சை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதித்தனர். காளைகளைப் பிடிக்க 300 வீரர்கள் களம் கண்டனர். இதில் மாடு பிடி வீரர்கள் 10 பேர், பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 13 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.