பொன்னமராவதி, மார்ச் 8 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் திருமயம் தொகுதியில் உள்ள 569 பயனாளிகளுக்கு ரூ.2.26 கோடி மற்றும் ரூ.2.17 கோடி மதிப்பிலான 4552 கிராம் தங்கம் ஆகியவற்றை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரம்யா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 163 பெண்களுக்கு தமிழக அரசின் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஆவுடையார்கோவில் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. மாவட்ட சமுகநல அலுவலர் கோகுலபிரியா தலைமை வகித்தார். 163 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்ககாசை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் வழங்கினார். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உமாதேவி, ஒன்றிய துணைத் தலைவர் பிரியா குப்புராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.