நாமக்கலில் விபத்தை சரி செய்ய வந்த 2 காவலர்கள் மீது வேன் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இன்று அதிகாலை அப்பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பேரலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் ராசிபுரம் காவல் நிலைய காவலர் தேவராஜன் ஆகியோர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று காரின் மீது லேசாக மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஓட்டுனரிடம் லாரியின் பின்புறம் நின்று சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் தேவராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த சுற்றுலா வேன், லாரியின் பின்புறம் மோதியது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் தேவராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் ராசிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்த வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் எஸ்.ஐ உள்பட காவலர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.