நாகர்கோவில், ஜுன் 13- கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் வட்டாரத்தில் இரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்ததால் மண்ணில் உள்ள நுண் உயிர்கள் அழிக்கப்பட்டு வளம் குறைந்து மண் மலடாகிப்போன நிலையில், மண் வளம் பாதுகாக்க அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மண் வளம் பாதுகாக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. மஞ்சாலுமூடு பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு திருவட்டார் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் தீபா செல்வன், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ராஜ்பிரவின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயற்கை விவசாயம் மற்றும் மாடிதோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
அட்மா திட்டசெயல்பாடுகள் மற்றும் பயறு வகைப்பயிர்களில் ஒருங்கிணைந்த உரநிர்வாகத் தொழில்நுட்பங்கள், உரங்கள், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம் குறித்தும் எஸ்.சந்திரபோஸ் விளக்கி கூறினார். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் குறித்து விவசாயிகளுக்கு ராஜ்பிரவின் பயிற்சி வழங்கினார். திருப்பதிசாரம் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஜெகன் மண்மாதிரி சேகரித்தல் குறித்த செயல் விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். வேளாண் அலுவலர்கள் அட்லின், அபினா, ஆட்லின் ஜெமிலா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் டி.சஜுலா ஆகியோர் பேசினர். உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனர்.