நாகர்கோவில்,ஏப். 5 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன்முறையைத் தூண்டவும், பதற்றத்தை உருவாக்கிடவும் பிஜேபி கட்சியினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். காரணங்கள் ஏதும் கிடைக்காத சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி, ஒன்றிய அரசுக்கு எதிராக நாடெங்கும் நடத்தி வரும் போராட்டங்களை ஒட்டி, நாகர்கோவிலிலும் போராட்டம் நடந்த வேளையில், போதுமான காவலர்கள் பாதுகாப்புக்கு இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சாலையில் போராட்டகார்கள் வந்த போது மோதல் சூழ்நிலையை உருவாக்கினர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி இருதரப்பினர் மீதும் காவல்துறை பாரபட்சமின்றி வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரிலும் பலரை கைது செய்துள்ளனர். ஆனால் இச்சம்பவத்தை சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் அணுகுவதற்கு பதிலாக, இதுதான் நல்ல வாய்ப்பு என்று கருதி மாவட்டத்தில் இழந்து போன செல்வாக்கினை மீட்கும் நப்பாசையில், செவ்வாய்க்கிழமை இரவில் ஏராளமான அரசு பேருந்துகளை கல்வீசி சேதப்படுத்தி பதற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
புதன்கிழமை காலையில் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்து சேவை இதனால் முடக்கப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்கள். பிஜேபி கட்சியினரின் கடந்தகால வன்முறை வெறியாட்டங்களை கவனத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை மேற்கொண்டிருக்க வேண்டும். பிஜேபியின் இந்த வன்முறை அரசியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. வன்முறையாளர்கள் எந்தவித பயமும் இல்லாமல் சுற்றித் திரியும் நிலைமையை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனுமதித்திட கூடாது. தற்போது மேலும் பதற்றத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் வகையில் அறிக்கைகளை பிஜேபி தலைவர்கள் வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். எனவே மாவட்டத்தில் பேருந்துகளை உடைத்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ள பிஜேபியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் காவல்துறையும் முன்வர வேண்டும். மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.