வேதாரண்யம், ஜூலை 6 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (36). இவர் கரியாப்பட்டினம் நடுக்காடு பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் தனது பணத் தேவைக்காக செம்போடை மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (24) என்பவரிடம் அதிக வட்டிக்கு ரூ.17 லட்சம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் ராஜேஷ்கண்ணா தனது வழக்கறிஞர் மூலம், “நடராஜனிடம் வாங்கிய பணம் முழுவதையும் திருப்பி கொடுத்து விட்டேன். இனி பாக்கி இல்லை” என நோட்டீஸ் அனுப்பினாராம். இதனால் ஆத்திரமடைந்த நடராஜன், தனது உறவினர்களான சூர்யா (24), கத்தரிப்புலம் முரளி (24), செட்டிப்புலம் சுப்பிரமணியன் (38), தென்னம்புலம் விஜயசங்கர் (32), ராதா (52) ஆகியோருடன் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ராஜேஷ்கண்ணா வீட்டிற்கு சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசி, கையால் தாக்கியுள்ளனர்.
பின்பு ராஜேஷ்கண்ணா, அவரது மனைவி சரண்யா (28), அவரது குழந்தை மற்றும் அவரது வீட்டில் வேலை பார்த்த சத்தியசீலன் (28) ஆகியோரை காரில் கடத்திச் சென்றதாக கரியாப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நாகை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கடத்தப்பட்ட அனைவரும் ஒரு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு, வட்டிக்கு பணம் வாங்கியவர் குடும்பத்தை கடத்திய 6 பேர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.