districts

சவூதியில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனைவி மனு

வேதாரண்யம்,  மார்ச் 7 -  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன்காட்டை சேர்ந்த ரேவதி (48) மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.  அந்த மனுவில், எனது கணவர் சுப்பிரமணியன் (58) கடந்த 10 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் தோட்ட வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார்.  இந்நிலையில் சவுதி அரேபியாவில் கடந்த வாரம், எனது கணவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக அங்கிருந்த ஒருவர் எனக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.  எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய தூதரகம் மற்றும் சவுதி தூதரகத்திற்கு மனு அனுப்பியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது கணவரின் உடலை சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த சுப்ரமணியனுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

;