நாகப்பட்டினம், ஜன.9 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளின் பாதுகாவலனாக இருந்து நாகைமாலி எம்எல்ஏ சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும் மக்கள் மன்றத்தில் களப்பணியும் ஆற்றுகிறார்.
திருப்பூண்டி கீரன் ஏரி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான திருப்பூண்டி கீரன் ஏரியை ஆழப்படுத்தி, கரைகளை அகலப்படுத்தியும் அதேசமயம் பலப்படுத்தியும் தர கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான நாகைமாலி சட்டமன்றத்தில் பேசினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீரன் ஏரி பரப்பளவில் மிகப்பெரிய ஏரி. கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் பகுதியில் உள்ளது. இந்த ஏரி தொடர்பாக நடப்பு சட்டமன்றத்தில் அரசிடம் கோரிக்கை வைத்து, நாகைமாலி சட்டமன்றத்தில் பேசியதாவது: “நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி கிழக்கு காமேஸ்வரம் ஊராட்சியில் கீரன் ஏரி உள்ளது.
இது முற்றிலும் மழைநீரால் நிரம்பக் கூடிய ஏரியாகும். இது 2.50 சதுர கிலோ மீட்டர் நீர்ப் பிடிக்கும் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் தண்ணீர் கொள்ளளவு 15.76 மில்லியன் கனஅடி. கரைகளின் மொத்த நீளம் 4000 மீட்டர். இந்த ஏரியில் இருந்து 2 வழங்கு வாய்க்கால்கள் மூலம் நெல் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 184.39 ஹெக்டேர் விவசாய நிலப்பகுதி இந்த ஏரியின் மூலம் பாசனத்திற்கு உதவுகிறது. மேலும் இந்த ஏரியை ஆழப்படுத்தி கரைகளை அகலப்படுத்தி, உயர்த்தி கட்டினால் இன்னும் கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும்.இதனால் அங்கு இருக்கும் விவசாய நிலப்பகுதிகளும் அருகில் இருக்கிற கிராம பகுதி மக்களுக்களும் பயன்பெறுவர்.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு உதவும் வகையில் அமையும். கூடுதலாக விவசாயம் சார்ந்த மக்களின் பொருளாதாரம் பெருகும்,எனவே கீரன் ஏரியை ஆழப்படுத்தி,கரைகளை அகலப்படுத்தி,உயர்த்தி கட்டியும் தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். சட்டமன்றத்தில் நாகைமாலி எம்எல்ஏ பேசிய காணொளி சட்டமன்ற தொகுதிக்கு முழுமைக்கும் வைரலாக பரவியது. குறிப்பாக கீரன் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களான திருப்பூண்டி மேற்கு,காமேஸ்வரம், கீழப்பிடாகை, காரப்பிடாகை,விழுந்தமாவடி, பிரதாபராமபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் அதிகமாக பகிர்ந்து, தங்களுடைய சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஏரியில் எடுக்கப்படுகிற மண்ணானது நாகப்பட்டினம் துவங்கி திருத்துறைப்பூண்டி வரை செல்லும் புதிதாக போடுகிற ரயில்வே பாதைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் மூலம் ஏரி இன்னும் ஆழப்படுத்த முடியும். ஏற்கனவே 2011-2016ல் இதே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலங்களில் அப்போதும் இந்த ஏரி குறித்து சட்டமன்றத்தில் விரிவாக உரையாற்றினார்.வினா எண் 19963ல் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துபேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் நீர் ஊருக்குள் வருவதை தடுப்பதற்கு கதவணை கட்டித்தர கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி கடலோரக் கிராமம் ஆகும். வடகிழக்கு பருவமழை செய்து வந்த சூழலில் வெள்ள நீர் வடிய வைக்ககும் வடிகால் வழியாக உவர் நீரானது வெள்ளக் காலங்களில் ஊருக்குள் வந்து விடும். ஊருக்குள் வரும் கடல் நீரானது விவசாயம் செய்கின்ற பகுதிகளிலும். மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் சூழ்ந்து விடுகிறதுஎன்று மக்கள் முறையிட்டனர். இதனால் சாகுபடி செய்த பயிர்கள் கருகி விடுகின்றன.கடல்நீர் மீண்டும் வடியாமல் விவசாய நிலங்களில் தங்கிவிடுவதால் மண் வளம் பாதிப்புக்கு உள்ளாகிறது. நாளடைவில் சாகுபடி செய்ய முடியாத சூழலில் மண்வளம் மாறிவிடுகிறது.
பிறகு எந்த சாகுபடியும் செய்யமுடியாமல் வறண்ட பூமியாக மாறி எதற்கும் பயனற்ற நிலையில் கிடக்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை ஊருக்குள் தண்ணீர் வந்து செல்வதும்.வெள்ள காலங்களில் வடிகால் வழியாகவே விவசாய பகுதிக்கு கடல்நீர் வருவதும் வாடிக்கையாகிவிடுகிறது. இப்படி கடல்நீர் அடிக்கடி ஊருக்குள் வரும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டு நாளடைவில் குடிநீரும் உப்பு நீராக மாறி விடக்கூடிய அபாயமும் ஏற்படுகிறது. பாதிப்புக்கு உள்ளான அந்த பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த பகுதி விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கடல் முகத்துவாரத்துவாரமான வெள்ள நீர் வடியும் இடத்தில் கதவணை கட்டி கட்டித் தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகளின் ஆலோசனைப்படி கட்டித் தர அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார் .
மழைக்காலங்களில் வீணாக தண்ணீர் கடலுக்கு செல்வதை தடுக்கும் தடுப்பணை ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணாறு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் தடுப்பணையை ஆய்வு செய்தார். ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியோடு இப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெண்ணாற்றில் இரு கரைகளும் பலப்படுத்தப்பட்டு புதிதாக தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. கோடைக்காலங்களில் உப்பு நீர் அதாவது கடல் நீர் உட்புகாமல் இருக்கவும், மழைக்காலங்களில் நன்னீர் கடலுக்குச் சென்று விரயம் ஆவதை தடுப்பதற்கும் இவ்வணை கட்டப்பட்டது. இவ்வாற்றின் மூலம் பாசனத்தை பயன்படுத்திக்கொள்ளும் கிராமங்களான பாலகுறிச்சி. ஓட்டத் தடை.சோழவித்தியாபுரம். கருங்கண்ணி. மடப்புரம்.மகிழி.சின்னதும்பூர்.பெரியதும்பூர் இன்னும்பல ஊராட்சிகளும்தேக்கி வைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் .
இதனை அறிந்த கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி அந்த தடுப்பணையின் உறுதித் தன்மையையும் இன்னும் மேற்கொள்ள இருக்கும் கட்டுமான விவரங்களையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அப்பகுதிக்கு வரவழைத்து அவர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்தர்.பல நூறு ஹெக்டேர் விவசாய நிலங்கள் இந்த தடுப்பணை மூலம் பயன்பெற உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் பொது மக்களிடம் எடுத்துரைத்தார். இவ்வாறு சட்டமன்றதொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நீர் நிலைகள் குறித்து மிகுந்த அக்கறையோடு செயலாற்றி வருகிறார் செங்கொடி இயக்கத்தின் மக்கள் ஊழியர் நாகைமாலி எம்எல்ஏ. இதனால் அனைத்து தரப்பு மக்களிடமும் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் என்றால் அது மிகையல்ல.