districts

img

கோடியக்கரையில் குவிய துவங்கிய வெளி நாட்டு பறவைகள்

கோடியக்கரையில் குவிய துவங்கிய வெளி நாட்டு பறவைகள்

நாகப்பட்டினம், டிச.26-

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வர துவங்கியுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வர துவங்கும். இந்த காலங்களில் ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளி நாடுகளில் நிலவும் குளிரை போக்க 200க்கம் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அதிகமாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால், பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், வெளி நாடுகளில் இருந்து பறவைகள் வரத்தும் அதிகரித்துள்ளது.

ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள், இலங்கையிலிருந்து பூநாரை மற்றம் கரண்டி மூக்குநாரை, சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையைச் சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்நாகம் போன்ற வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. இந்த பறவைகளை இரட்டை தீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும், பார்வையாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிகளவில் வெளி நாடுகளில் இருந்து பறவைகள் வரும் என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்துள்ளார்.