தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் சாதிய அடையாளங்களை அழிக்கும் கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழகத்தின் பல கிராமங்களில் சாதிய அடையாங்களை காட்டும் வகையில், மின் கம்பம், தண்ணீர் தொட்டி, சுவர்கள் என பல பொது இடங்களிலும், வீடுகளிலும் சாதிய வண்ணங்களை பூசுகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது சாதிய அடையாளங்களை காட்டும் வகையில் வண்ண கயிருகளை கைகளில் கட்டியுள்ளனர். இதனால் மாணவர்களுக்குள் பல்வேறு மோதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறுகளை கட்டக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் பட்டியலின மாணவன் மீது சாதிய கொலைவெறித் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இச்சம்பவம் சாதி, மத பேதமற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் உறுதியேற்க வேண்டும் என்கிற அவசியத்தை உணர்த்தியது.
இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, அக்கநாயக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்களை அழைத்து மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் சமூக நல்லிணக்கம் தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்.
கூட்டத்தில், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ, பொது இடங்களில் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் உள்ள சாதிய அடையாளங்களை நீக்க பொது மக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மக்கள் தாமாகவே மின் கம்பங்கள், ஊர் பெயர் பலகை, தண்ணீர் தொட்டி, பேருந்து நிறுத்தம் என பல்வேறு இடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை அழித்தனர்.
சாதிய அடையாளங்களை பொது மக்களே அழித்து வருவதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.