தூத்துக்குடி, டிச.21- அதி கனமழை - வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க போதுமான நிதியை ஒன்றிய அரசு துரிதமாக வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழனன்று மாலை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த கே.பாலகிருஷ்ணன், கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இதில் மிக அதிகமான பாதிப்புக்குள்ளாகி இருப்பது தூத்துக்குடி மாவட்டம். மக்கள் வேதனையிலும் சோதனையிலும் இருக்கிறார்கள். இப்போதுதான் அரசு நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சம் நிவாரண பொருட்கள் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்களை இன்னும் கூடுதலாக வரவழைத்து எல்லா இடங்களிலும் நீரை வடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம், ஏரல் போன்ற பகுதிகளில் அமைச்சர்கள் முகாமிட்டு தீவுகளாக மாறிய இடங்களில் இருந்து மக்களை மீட்டிருக்கிறார்கள். இன்னமும் தண்ணீர் முழுவதும் வடியவில்லை. தண்ணீர் வடிய மேலும் சில நாட்கள் ஆகலாம்.
அரசு சார்பில் துரிதமான நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பது நல்ல அம்சம். அதே நேரத்தில் சில இடங்களில் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்கிற குறைபாடும் மக்கள் மத்தியில் உள்ளது. மாநகரப் பகுதிகளில்கூட தண்ணீர் வடியவில்லை. உணவு கிடைக்கவில்லை என்கிற குறைபாடுகள் உள்ளன. அமைச்சர்களிடமும் அதிகாரிகளி டமும் பேசுவதாக தெரிவித்தேன்.
தூய்மைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் அதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து நடவடிக்கைகளை இன்னும் வேகமாக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்க போதுமான நிதியை விரைவாக வழங்க வேண்டும். கிண்டலும் கேலியும் பேசும் அண்ணாமலை ஒன்றிய அரசிடம் நிதி வழங்க வலியுறுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மூலம் ஒன்றிய அரசை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.