districts

பழவனக்குடி வாய்க்கால் தூர்வாரப்படுமா?

திருவாரூர், ஜூலை 31-  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் நகர சிறப்பு பேரவை தியாகி பி.இராமமூர்த்தி நினைவகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகர செயலாளர் என்.ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்ட துணை செயலாளர் கே.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் ஜி.பவுன்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.  புதிய தலைவராக டி.சேகர், செயலாளராக என்.ராஜசேகர், பொருளாளராக எஸ்.ராமசாமி, துணைத் தலைவராக ஆர்.பன்னீர்செல்வம், துணைச் செயலாளராக ஆர்.நெப்போலியன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் கிடக்கும் பழவனக்குடி மற்றும் குருத்தேழி வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட வேண்டும். கோயில் நில குத்தகை பாக்கிகளை ரத்து செய்ய வேண்டும். சிறு-குறு விவசாயிகளுக்கு உடனடியாக கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.