திருவாரூர், ஜூன் 7 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கொட்டாரத்தில் ஐராவதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகை சாகுபடி செய்து வருகிற விவசாயிகளுக்கு கோயில் நிர்வாகம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் குத்தகை பாக்கி நிலுவையில் இருப்பதாகவும் அதை செலுத்தாவிட்டால் நிலத்தை விட்டு வெளியேற்றுவோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது. அம்மாநாட்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகத்திடம், திருக்கொட்டாரம் கோயில் நில குத்தகை விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் சார்பில் மா.வரதராஜன் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில், கோயில் நிர்வாகம் கணக்கு வழக்கின்றி ரூ.2 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை குத்தகை பாக்கி குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 50 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிற தங்களுக்கு நிர்வாகம் அனுப்பியுள்ள பாக்கித்தொகை, 100 ஆண்டுகளுக்கான குத்தகையைவிட அதிகம் என்றும், பாக்கியை செலுத்தத் தவறினால் நிலங்களிலிருந்து வெளியேற்றுவோம் என மிரட்டுகிற நிர்வாகத்திடமிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.