திருவள்ளூர், ஏப்.5- பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிருடன் பிடித்த பாம்பின் தலையை கடித்து துப்பி வீடியோ எடுத்த 3 வாலிபர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான சூர்யா, சந்தோஷம் ஆகியோருடன் சேர்ந்து தண்ணீர் பாம்பு ஒன்றை பிடித்தார். அவர் பாம்பின் தலையை தனது வாயால் கடித்து துப்பினார். இந்த காட்சியை நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் லைக்கிற்கு ஆசைப்பட்டு அந்த வீடியோ தங்களது பேஸ்புக் வலை தளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மோகன் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா, சந்தோஷம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வன விலங்குகளை துன்புறுத்துதல், வனவிலங்குகளுக்கு மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.