பெரியபாளையம்,பிப்.20- திருவள்ளூர் மாவட்டம், சோழ வரம் ஒன்றியம், ஆரணி மொத்த காய்கறி மார்க்கெட் அருகே ஆதி திராவிட மாணவர் விடுதி ஒன்று தாட்கோ நிதி உதவியுடன் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் கட்டி முடிக்க பணியாணை வழங்கப் பட்டது. மூன்று அடுக்குகளுடன் 12 அறைகள் கொண்ட இக்கட்டிடம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக மிகத்தாமதமாக நடை பெற்று வருகிறது. மேலும், தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிடத்தை கட்டி வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். மேலும், பணி நடைபெறும் இடத்தில் என்ன? பணி நடை பெறுகிறது. எவ்வளவு தொகை, எந்த நிதியில் கட்டப்படுகிறது. பணி எப்பொழுது துவங்கி, எப்பொழுது நிறைவடைகிறது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இப்பணியின் தரத்தை ஆய்வு செய்து விரைவாகவும், தரமாகவும் கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.