திருவள்ளூர், மே 17- மாற்றுத்திறனாளிகளை சாதிபெயரை சொல்லி திட்டிய, நபர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. பொன்னேரி அருகில் உள்ள நாலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திற னாளியான உஷா (வயது37). இவர் பெருஞ்சேரி கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி வரும் கஸ்தூரி உதயன் என்பவரிடம் ஏலச்சீட்டுக்காக மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கட்டிய பணத்தை உஷா திரும்ப கேட்டுள்ளார். அப்பொழுது உஷாவை கஸ்தூரி உதயன் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை. ஆகவே சீட்டுப்பணம் செலுத்தியவருக்கு தொகையை திருப்பி அளிப்பதுடன், சாதியை சொல்லி இழிவாக பேசியவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யவேண்டும் என பொன்னேரி பகுதிச்செயலாளர் எஸ்.சி.சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.