திருவள்ளூர்,ஏப்.1- பழவேற்காடு அருகே குளத்துமேடு பழங்குடி கிராம மக்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து திரும்பப் பெறக் கோரி வியாழனன்று (மார்ச் 31) பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். பழவேற்காடு ஊராட்சியில் அடங்கிய குளத்துமேடு பகுதியில் பழங்குடி மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பயன்பாட்டில் இருந்து வந்த 4 ஏக்கர், 13 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் உதவியோடு பட்டா மாற்றம் செய்து, வேறு ஒருவருக்கு விற்று உள்ளதாக தெரிகிறது. இது குறித்து பழங்குடி கிராம மக்களுக்கு இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. ஆகையால் கிராம மக்கள் பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு விவரத்தை கேட்டறிந்தனர். அதன்படி தற்போது அந்த நிலம் தனி நபர்கள் நான்கு பேரின் பெயரில் உள்ளதாகவும் இது குறித்து மீண்டும் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலர் கூறியுள்ளார். ஆனால் தனிநபர்கள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பழவேற்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி சரவணனிடம் பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.