districts

img

வாலிபர் சங்க காத்திருப்பு போராட்டத்திற்கு வெற்றி!

திருவண்ணாமலை, ஜூன் 28- தண்டராம்பட்டு வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணான விஜயகுமாரிக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த பட்டாவை வேறொருவருக்கு வழங்கியுள்ளனர்.  அந்த இடத்தை வாங்கிய நபர் வீடுகட்டும் பணியை துவங்கியுள்ளார். இதுகுறித்து ராஜகுமாரி அதிகாரிகளிடம் முறையிட்டும் தடுக்காத அதிகாரிகளையும் தனி வட்டாட்சியரையும், தண்டராம்பட்டு கிராம நிர்வாக அலுவலரையும் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செங்கம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ஏற்பாட்டில் பேச்சுவார்த்தையில், பாதிக்கப்பட்ட நபரின் பெயருக்கு பட்டா வழங்குவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.  இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிஎம்.பிரகாஷ், பொருளாளர் சி.முருகன், சிபிஎம் செங்கம் வட்டாரச் செயலாளர் லட்சுமணன், தண்டராம்பட்டு வட்டாரச் செயலாளர் அண்ணாமலை, மூத்த தோழர்கள் கணபதி, காமராஜ், வாலிபர் சங்க தண்டராம்பட்டு செயலாளர் ராஜா, எம்.வடிவேல், தியாகராஜன், தமிழ்ச்செல்வன், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;