திருவண்ணாமலை, ஜூன். 2- சாதிப்பெயரை சொல்லி மாணவனை இழிவு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் நெடுங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் வெற்றிவேல். இவர் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவன் வெற்றிவேலை சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் தந்தை குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழனன்று (ஜூன் 2) புகார் அளித்தார். உடன் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் என்.எ.கிச்சா, மகளிரணி தலைவர் தலித் நதியா ஆகியோர் இருந்தனர்.